நாடாளுமன்றத்தில் அதிமுக ஒத்திவைப்புத் தீர்மானம் தாக்கல்- அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

சில்லறை வணிகத்தில் 51 சதவீத வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியபோது, பாஜக கூட்டணியும், அதிமுகவும் தனித் தனியாக ஒத்திவைப்புத் தீர்மானங்களை கொண்டு வந்தன. இந்த இரு தீர்மானங்களுக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
அதன் கீழ் இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவை வலியுறுத்தின. ஆனால் அதை அரசுத் தரப்பு நிராகரித்தது. ஓட்டெடுப்பு இல்லாத விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று அரசுத் தரப்பில் கூறப்ட்டது. இதனால் பெரும் அமளி ஏற்பட்டது.
பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி எழுந்து பேசுகையில், சில்லரை வணிகத்தில் 51 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறித்து விவாதிக்க தான் ஏற்கனவே ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருப்பதாக கூறினார். அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக சரத் யாதவ் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் பேசினர். இடதுசாரி உறுப்பினர்களும் அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இந்த சமயத்தில் டிஆர்எஸ் கட்சியினர் எழுந்து தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினர். இதனால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. ஒரே சத்தமாக இருந்தது.
இதையடுத்து இரு அவைகளும் முதலில் பிற்பகல் 12 மணி வரையிலும், பின்னர் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேச நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை காலை இக் கூட்டம் நடக்கிறது.
பிரதீபாவுடன் பிரதமர் சந்திப்பு
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது தனது சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்கள், நாடாளுமன்றக் கூட்ட நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் விளக்கினார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைத் செய்திக்குறிப்பில், இந்த சந்திப்பு 40 நிமிடம் நடந்தது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்து இரு தலைவர்களும் பேசினர். தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர் என்று தெரிவித்துள்ளது.
சோனியாவுடன் மன்மோகன் சிங் ஆலோசனை
இந்த நிலையில், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரத்தால் எழுந்துள்ள பிரச்சினையை சமாளிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அத்தனை எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications