தமிழக அரசு இரக்கமுள்ள அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்: கேரள அரசு
கோழிக்கோடு: முல்லைப்பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரள நிதியமைச்சர் கே.எம். மணி தெரிவித்துள்ளார்.
இதி குறித்து அவர் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரூ. 600 கோடி செலவில் முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதில் கேரள அரசு முனைப்பாக உள்ளது. எங்கள் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எங்கள் நிதியைக் கொண்டு எங்கள் மாநிலத்தில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு. முல்லைப்பெரியாறு அணையைச் சுற்றியமைந்துள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 45 லட்சம் பேர் அச்சத்துடனேயே இருக்கின்றனர். இதற்கு காரணம் தமிழக அரசு ஒத்துழைக்காதது தான்.
இதனால் தான் இந்த பிரச்சனை தீர்வு காண முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. புதிய அணைக்கான நிதி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இரக்கமுள்ள அணுகுமுறையை கையாள வேண்டும். அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று நாங்கள் என்றுமே கூறியதில்லை. அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் 45 லட்சம் பேரின் வாழ்க்கையோடு எங்களால் விளையாட முடியாது.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான வழிகளை பின்பற்றுமாறு தமிழக அரசுக்கு அவர் தான் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப இடது சாரியினர் முடிவு செய்துள்ளனர். இதில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கவிருக்கின்றனர்.