மத்திய அரசில் கேரளத்திற்கு ஆதரவாக உள்ள சில சக்திகள்: ராமதாஸ்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்குரிய உரிமையை பறிப்பதற்காக நயவஞ்சகமான வழிமுறைகளை கேரள அரசு கையாளத் தொடங்கி உள்ளது.
முல்லைப் பெரியாற்று பிரச்சனையில் கேரள அரசு கடைப்பிடித்து வரும் பிடிவாத போக்காலும், அதை மத்திய அரசு தட்டிக் கேட்காததாலும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கேரளம்தான் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த அம்மாநில அரசு முயல்கிறது.
மத்திய அரசில் உள்ள சில சக்திகள் கேரளத்திற்கு ஆதரவாக இருப்பதால் இவற்றை மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கேரள அரசின் இந்த அடாவடிகளை தமிழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இனியும் வாய் மூடிக் கொண்டிருந்தால் முல்லைப் பெரியாறில் நமக்குரிய உரிமையை இழக்க நேரிடும்.
கேரள அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு மூலம் பாசன வசதி பெறும் 5 மாவட்டங்களில் அரசு ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். அதில் முல்லைப் பெரியாறு சிக்கலில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், இந்தப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.