விஸ்வரூபமெடுக்கும் முல்லைப் பெரியாறு விவகாரம்- கொடநாடு பயணத்தை ரத்து செய்தார் ஜெ.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தனது கொடநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டுச் செல்வதாகவும், அங்கு சில வாரம் தங்கியிருந்து அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை அவர் கவனிப்பார் என்றும் கூறப்பட்டது.
நேற்று ஜெயலலிதா மீனம்பாக்கத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் அல்லது கார் மூலம் கோடநாடு செல்லவும் திட்டமிட்டிருந்தார். அவருடன் தலைமை செயலர், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக கவர்னர் ரோசையாவை கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடத்துக்கு மேல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகே கொடநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது.
கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் சென்னைக்கு திரும்ப வரவழைக்கப்பட்டுள்ளன.
பயணம் தள்ளிப் போனதற்கு நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சூடு பிடித்து வருவதும் இன்னொரு முக்கியக் காரணம் என்று தெரிகிறது. கேரளாவில் போராட்டம் என்ற பெயரில் தற்போது ஜெயலலிதாவின் கொடும்பாவிகளை எரிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். எனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தீவிரமாக செயல்பட அவர் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே தனது கொடநாடு பயணத்தை அவர் தள்ளி வைத்திருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.