கேரள எம்பிக்களுக்கு பதிலடி..நாடாளுமன்றம் முன் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் திட்டத்தை கண்டித்து அதிமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து அந்தப் பகுதியில் புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி கேரள மாநில எம்பிக்கள் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் ரபி பெர்னார்ட் உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தம்பிதுரை பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிக வலுவாக உள்ளது. அதற்கு எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலையில், கேரள அரசு இதை அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கிறது. கேரள எம்பிக்களும் அணை வலுவிழந்து இருப்பதாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காக்காமல், உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.