முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்: சிபிஎம்
மதுரை: முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த நிபுணர் குழுவை தமிழக அரசும், கேரள அரசும் ஏற்றுக் கொண்டு தங்கள் பிரதிநிதிகளை அந்த குழுவில் இடம் பெறச் செய்துள்ளன.
அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது, அணையின் பாதுகாப்பு, அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த குழுவின் பரிசீலனையில் உள்ளது. நிபுணர் குழு பிரச்சனையின் தீவிரம் மற்றும் 2 மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கால தாமதத்துக்கு இடம் தராமல், தனது அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக தொடரும் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் சுமூக தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதற்கிடையே 2 மாநில மக்களிடையேயும் பகைமை உணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு இடம் தர வேண்டாம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழக, கேரள அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 மாநில மக்களிடையே நட்புறவு மற்றும் சகஜ நிலையை உறுதிப்படுத்துமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.