கொழும்பு கருத்தரங்கம்: பேராசியர்கள் செல்ல தமிழக அரசு அனுமதிக்க கூடாது- வைகோ
சென்னை: கொழும்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகேள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் வருகிற 14, 15 தேதிகளில் மனிதவளக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, கொழும்பு பல்கலைக்கழகம் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகின்றது. இதில் பங்கேற்க, லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாத, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் செல்கிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் கலந்துகொள்ள ஆயத்தமாகி வருகின்றார்கள். கருத்தரங்கம் நடத்தும் அமைப்பினர் அவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
அனுமதி அளிக்கக்கூடாது
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழகப் பல்கலைக் கழகங்களில் இருந்தும், அரசுக் கல்லூரிகளில் இருந்தும் விரிவுரையாளர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே, தமிழகத்துப் பேராசிரியர்கள் இலங்கை செல்வதைத் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.