முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
கருணாநிதியிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டின் நிலை என்ன?
பதில்: முல்லைப்பெரியாறு அணை நீண்டகால பிரச்சினை. இதில் தமிழ்நாடு நியாயமாக நடக்கிறது. ஆனால் வேண்டுமென்றே பிடிவாதமாக நாங்கள் அணையை கட்டியே தீருவோம் என்றெல்லாம் கேரளா கூறி வருகிறது.
ஆரம்ப காலத்திலிருந்து தி.மு.க.வின் கொள்கையாக, என்னுடைய கருத்தாக நான் வெளிப்படையாக சொல்லி வருவதெல்லாம் கேரள மக்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் எந்தவிதமான மனக்குழப்பமும் வராமல், சகோதர ஒற்றுமையோடு இருதரப்பினரும் செயல்பட வேண்டும் என்பது தான். அதற்கேற்ற வழி வகைகளை நடுநிலையாக நின்று மத்திய அரசு செய்ய வேண்டும்.
ஏற்கனவே முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக நீதியரசர் ஆனந்த் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த குழுவில் தமிழ்நாட்டின் சார்பாகவும், கேரளாவின் சார்பாகவும் பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் முடிவையெல்லாம் அறிவதற்கு முன்பு, இடைக்காலத்தில் அவசரப்படுவது நல்லதல்ல என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
கேள்வி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மக்களை தூண்டுகின்ற வகையில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசும், தமிழ்நாட்டு மக்களும் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்து இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசுக்கு உதவி செய்ய வேண்டும். நாமும் கேரளாவை போல வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட்டால் நாட்டில் ஒற்றுமை இருக்காது, அமைதி இருக்காது என்றார் கருணாநிதி.
கேள்வி: கனிமொழி சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: நேற்றையதினமே அதையெல்லாம் சொல்லிவிட்டேன். கனி சிறையிலிருந்து வெளிவந்தபிறகு நான் இன்னும் கனியை சந்திக்கவில்லை. 3-ந் தேதி காலையில் தான் சென்னைக்கு வருகிறார்.
கேள்வி: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றி உங்கள் கட்சியின் கருத்து என்ன?
கருணாநிதி: அதைப்பற்றி நான் விவரமாக அறிக்கையே கொடுத்திருக்கிறேன். டெல்லியில் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கருத்தை எதிரொலித்திருக்கிறார்கள். அதிலே தி.மு.கழகத்தின் கருத்து என்ன என்பது ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.
கேள்வி: நாடாளுமன்றத்தில் இதற்காக ஒத்திவைப்பு தீர்மானமோ, வாக்களிப்போ வந்தால் அப்போது தி.மு.கவின் நிலை என்ன?
பதில்: அப்படியொரு நிலை வரும் போது பாராளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் தலைவர் எங்களை தொடர்பு கொண்டு கூறுவார். அப்போது கழகத்தின் நிலையை அவரிடம் எடுத்துச்சொல்வோம்.
கேள்வி: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால், தமிழகத்தில் உள்ள வணிகர்களை அது எந்த அளவிற்கு பாதிக்கும்?
பதில்: அதைப்பற்றி வணிகர் சங்க தலைவர்கள் எல்லாம் தொடர்ந்து சொல்லி வருகிறார்களே? நானும் அதைப்பற்றி அறிக்கையில் எழுதியிருக்கிறேனே?
கேள்வி: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தி.மு.க. என்ன செய்யும்?
பதில்: வரும்போது யோசித்து முடிவெடுக்கும் என்றார் கருணாநிதி.