கரூர் கலெக்டர் அலுவலக அதிகாரிக்கு அடி, உதை: குவாரி உரிமையாளர் கைது
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரியை கல்குவாரி உரிமையாளர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி கரியாப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (50). கல்குவாரி உரிமையாளர். இவருக்கு இப்பகுதியில் 2 கல்குவாரிகள் சொந்தமாக உள்ளன. அதில் ஒரு கல்குவாரியின் உரிமம் கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது.
இந்த கல்குவாரியின் உரிமத்தை புதுப்பிக்க கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் துறையில் கந்தசாமி விண்ணப்பித்தார். குவாரியின் மீது உயர் அழுத்த மின்கம்பி செல்வதால் மீண்டும் உரிமம் தருவதில் அதிகாரிகள் தாமதம் செய்து வந்தனர்.
மேலும் கல்குவாரி அருகே புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருந்த பெண் ஒருவர் வீட்டை காலி செய்யுமாறு கந்தசாமி மிரட்டியதாக கூறப்பட்ட விவகாரம் குறித்து அவரை புவியியல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி புவியியல்துறை உதவி ஆய்வாளர் கலைவாணனை(50) சரமாரியாக அடித்து உதைத்தார். இது குறித்து கலைவாணன் கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.