முல்லைப் பெரியாறு: சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு திட்டம்
முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழக பாசனத்துக்கும், மின் உற்பத்திக்கும் உதவியாக இருக்கும் இந்த அணையை இடித்து விட்டு, தனது பகுதிகள் அதிக பாசனம் பெறும் வகையில், புதிய அணை கட்ட கேரளா முயன்று வருகிறது.
இதற்காக சிடி, சினிமா, டெல்லியில் தர்ணா, கோவாவில் நடிகர்களை விட்டு டிராமா என அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குறித்து விவாதிக்க கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் டிசம்பர் 9ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அதில், அணையை இடிக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் கேரளத்தின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கும் விதத்தில் தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டமும் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன.
இதை ஏற்று சிறப்பு சட்டசபை கூட்டத்தை அடுத்த வாரம் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதை எதிர்த்தும், புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வற்புறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றி அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் நடக்க இருந்தது. அதற்கு முன்பாகவே முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.