மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு
சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனக்கு சொந்தமான 2 கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார்.
எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5 கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.
என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர். தற்போது அந்த வீட்டில் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வசிக்கிறார்.
என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து எனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர். எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார் குமார்.
5 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, சீனிவாசன், சுப்பாரெட்டி, ராஜா சங்கர் ஆகியோர் மீது கொலை மிரட்டல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைவது, சொத்து அபகரிப்பு, கூட்டுச் சதி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை திமுகவின் கடை நிலை, இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீதுதான் நிலம், இடம் அபகரிப்பு, கொலை மிரட்டல் வழக்குகள் பாய்ந்தன. தற்போது முதல் முறையாக திமுக மேல் மட்டத் தலைவர் மீதும் அவரது மகன் மீதும் இந்த வழக்குப் பாய்ந்திருப்பது திமுக வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.