லோக்பால் மசோதா டிச.9ல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
டெல்லி: லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். அத்துடன் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வரும் 11ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
எனவே லோக்பால் மசோதாவை விரைவில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி தலைமையிலான 30 பேர் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு அபிஷேக் சிங்வி தலைமையிலான குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இன்று மாலை நடக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் கீழ்மட்ட அதிகாரிகளை சேர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
இதையடுத்து வரும் 9ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
லோக்பால் சட்டத்தில் கீழ்மட்ட அரசு ஊழியர்களையும் கொண்டு வராவிட்டால் சாதாரண மக்கள் தொடர்ந்து ஊழலை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும். எனவே லோக்பால் மசோதாவில் கீழ்மட்ட அரசு ஊழியர்களையும் கொண்டுவர வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
லோக்பால் மசோதா தாமதமாகாது-அபிஷேக் சிங்வி:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சிற்வி, ஏற்கனவே குறிப்பிட்ட தேதியைவிட இரண்டு நாட்கள் தாமதமாக மசோதா தாக்கல் செய்யப்படும். மசோதாவை மொழி பெயர்க்க, அச்சடிக்க மற்றும் பைண்டிங் செய்யத் தான் அந்த 2 நாட்கள் அவகாசம்.
இந்த மசோதா எந்த ஒரு தனி நபரையோ, நிறுவனத்தையோ திருப்திபடு்ததுவதற்காக தயாரிக்கப்படவில்லை. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
நமது ஜனநாயகத்தை திருப்திபடுத்தும் வகையில் நாங்கள் இந்த மசோதாவை தயாரித்துள்ளோம். யார் கருத்தையும் ஒதுக்கவில்லை. அனைவரையும் திருப்தபடுத்த தான் இந்த குழு. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த மசோதாவை தயார் செய்கிறோம் என்றார்.
லோக்பால் மசோதா என்று தாக்கல் செய்யப்படும் என்று உறுதியாக ஒரு தேதியைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். ஆனாலும் 9ம் தேதி அது தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.