லோக்பால்: நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை அன்னா குழு நிராகரிப்பு
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை அன்னா குழுவினர் நிராகரித்துள்ளனர். அந்த பரிந்துரைகளால் ஊழலை அழிக்க முடியாது மாறாக ஏற்கனவே இருக்கும் ஊழல் தடுப்பு முறைகளை சீர்குலைத்துவிடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அன்னா குழு உறுப்பினரான அரவி்ந்த் ஜெக்ரிவால் கூறியதாவது,
லோக்பால் மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் ஊழலை அழிக்க உதவாது. மாறாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை சீர்குலைத்துவிடும். சிபிஐ-ஐ மூன்றாகப் பிரிக்கும் அந்த குழுவின் பரிந்துரை அதை முடக்கிவிடும். உறுதியான லோக்பால் மசோதா வரும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் ஏற்காமலும் போகலாம். அதனால் பொறுத்திருந்து பார்த்து தான் எதையும் சொல்ல முடியும் என்றார்.
இந்த குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் திருப்தியளிக்காததால் அன்னா உண்ணாவிரதம் இருப்பாரா என்று ஜெக்ரிவாலிடம் கேட்டதற்கு, உண்ணாவிரதம் இருப்பது பற்றி அன்னா தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.