முல்லைப் பெரியாறு அணை இருப்பை 120 அடியாக குறைக்க கேரள சட்டசபை தீர்மானம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை முன்னிறுத்தி கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இன்று கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் உம்மன் சாண்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது, பலவீனமாக உள்ளது. இதனால் கேரளாவின் ஐந்து மாவட்ட மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அச்ச உணர்வை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும். அதேபோல புதிய அணை கட்ட வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்துடனான உறவு பாதிக்காத வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவே கேரளா விரும்புகிறது என்றார்.
பின்னர் பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்துப் பேசினார்.