முல்லைப் பெரியாறு: டெல்லி பேச்சுவார்த்தையை புறக்கணிக்க தமிழகம் திட்டம்?
இந்த விவகாரம் குறித்து தமிழக, கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. இதையடுத்து அந்தக் கூட்டமே ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் இரு மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதுதொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இரு மாநில பொதுப்பணித் துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
வரும் டிசம்பர் 15 அல்லது 16ம் தேதி இந்தப் பேச்சுவார்த்தையை டெல்லியில் வைத்துக் கொள்ளலாம், இந்த இரு தேதிகளில் உங்களுக்கு ஏற்ற ஒரு தேதியைத் தேர்வு செய்யலாம் என்று தமிழக, கேரள மாநில அதிகாரிகளுக்கு மத்திய நீர்வளத்துறை கோரிக்கை விடுத்தது.
ஆனால், இந்தக் கூட்டத்தையும் தமிழக அரசு புறக்கணிக்கும் என்று தெரிகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவின் கூட்டம் கடந்த 5ம் தேதி நடந்தது. அதில், நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு எனக் கூறி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு 10 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு தனது பதிலை டிசம்பர் 16ம் தேதிக்குள் அளிக்கவுள்ளது.
தனது பதிலில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; அதில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று தமிழக அரசு கூறவுள்ளது.
இந் நிலையில், மத்திய அரசு அதே தேதியில் கூட்டும் கூட்டத்திலும் கேரள அரசு கிளப்பும் தேவையில்லாத புரளிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தமிழக அரசு கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் இந்த அணை தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பேசிப் பிரயோஜனம் இல்லை என்றும் தமிழகம் கருதுகிறது.
இதனால் இக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவுள்ளது.