முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்த கேரள அமைச்சர் ஜோசப்
திருவனந்தபுரம்: கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமையன்று முல்லை பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
அணையை நிர்வகித்து வரும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக இந்தஆய்வு நடந்துள்ளது. அமைச்சர் ஜோசப்புடன் பெரும் கும்பலாக பலரும் வந்து போயுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்துவிட்டது என்பது கேரள அரசின் வாதம். இந்த வதந்தியை உண்மை என்று நம்ப வைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வரும் கேரள அரசு அடிக்கடி ஆய்வு என்ற பெயரில் முல்லைப் பெரியாறு அணையை சோதனை செய்து வருகின்றனர்.
தற்போது தமிழகம் – கேரளா இடையை பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் தலைமையில் 9 எம்எல்ஏக்கள் அடங்கிய சட்டபேரவை குழுவினர் வியாழக்கிழமையன்று அணையை பார்வையிட்டனர்.
அனுமதி பெறவில்லை
அணையை பார்வையிட வேண்டும் என்றால் தமிழக பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரளாக்காரர்கள் ஒருபோதும் அனுமதி பெறுவதில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு வருவர்கள், பார்ப்பார்கள் போவார்கள்.
அந்த வகையில்,நேற்றும் கேரள எம்எல்ஏக்கள் குழு அனுமதி பெறாமல் அணையை பார்வையிட்டனர். மேலும் கேரள பத்திரிக்கையாளர்களையும் இந்த குழுவினர் அழைத்து வந்திருந்து முக்கிய அணை, பேபி அணை, மற்றும் மதகு பகுதிகளை அவர்களுக்கு சுற்றி காட்டிய ஜோசப், அணையில் இருந்து சாதாரணமாக கசியும் நீரை காட்டி, அணை பலவீனமாக இருப்பதால்தான் நீர் கசிவதாக கூறினார்.
நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்ததால் தான் 1979ல் மத்திய நீர்வளத்துறை பொறியாளர்கள், தமிழக பொது பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் புதிய அணைக்கான இடத்தை தேர்வு செய்தனர். பிறகு எப்படி இந்த அணை 999 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.
1896ல் பென்னி குயிக் அணையை கட்டும்போதே 50 ஆண்டுகள்தான் உறுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் அணை கட்டப்பட்டு 115 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அணை உள்ள இடம் பூகம்ப அபாயம் உள்ள பகுதியாகும். இங்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் 27 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே மக்களின் அச்சத்தை போக்க உடனடியாக நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணை கட்டுவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்று வழக்கம் போல புராணம் பாடி விட்டுச் சென்றார்.