இப்போதாவது தமிழர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும்- கருணாநிதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இன்று திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி இல்லை. தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக அரசு செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை கேரள அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். கேரள அரசு இதைச் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது நல்லதல்ல. அது நிறுத்தப்பட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மத்திய அரசுகளின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே உண்ணாவிரதம், மனித சங்கிலிப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவின் இந்த தீர்மானங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு தனது மெளனத்தைக் கலைக்கும், கலைக்க வேண்டும்.
இந்த விவகாரத்திலாவது, தமிழர்கள், தமிழக கட்சிகள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை நாம் காட்ட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்காக மத்தியஅரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார் கருணாநிதி.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால் அவர் வரவில்லை. போராட்டத்திலும் அவர் பங்கேற்க மாட்டார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications