கேரள தாக்குதல் எதிரொலி- பெரியகுளம் சாஸ்தா கோவிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
பெரியகுளம்: கேரளவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால், சபரிமலைக்கு மாலை போட்டுள்ள தமிழக ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையத்தைத் தொடர்ந்து தற்போது பெரியகுளத்தில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் குவியத் தொடங்கியுள்ளனர்.
குமுளி வழியான வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து தமிழக ஐயப்ப பக்தர்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்குப் போவதற்குப் பதில் உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதியையொட்டியுள்ள ஐயப்பன் கோவிலுக்கு பலர் சென்று விரதத்தை முடித்து மாலையைக் கழற்றி வருகின்றனர்.
அதேபோல, தற்போது பெரியகுளத்தில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலுக்கும் பக்தர்கள் பெருமளவில் வர ஆரம்பித்துள்ளனர். இந்தக் கோவிலிலும் சபரிமலை கோவிலைப் போலவே தினசரி நெய் அபிஷேகம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. இதனால் குமுளி வழியாக சபரிமலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பக்தர்கள் பெரியகுளத்திற்குச் சென்று இந்தக் கோவிலில் விரதத்தை முடித்து வருகின்றனர்.
இந்தக் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதாக கோவில் நிர்வாகம் கூறுகிறது.
போராட்டம் தொடர்கிறது
இதற்கிடையே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாக்காரர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
திருப்பூரில் அவினாசி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், கேரளத்தவரின் கடைகளுக்குச் சென்று அவற்றை மூடுமாறு கூறி வருகின்றனர். இதையடுத்து திருப்பூரில் நூற்றுக்கணக்கான கேரளத்தவரின் கடைகள் மூடப்பட்டன.
கேரள லாரிக்குத் தீவைப்பு-டயர்கள் எரிந்தன
இந்த நிலையில், கேரளாவிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தேங்காய் ஏற்றி வந்த லாரி லோடை இறக்கி விட்டு விருதுநகருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த லாரிக்கு நேற்று இரவு சிலர் தீவைத்தனர். அதில் லாரியின் டயர்கள் எரிந்து சேதமடைந்தன. லாரிக்கும் லேசான சேதம் ஏற்பட்டது.
மன்னார்குடியில் உண்ணாவிரதம்
இதேபோல மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டையில் கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புளியறையில் 7 பேர் கைது
கேரளாவையொட்டி நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள புளியறைப் பகுதியில், இன்று கேரள அரசுப் பேருந்தை மறித்துப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.