முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு கிடைக்குமா?-மதுரை உயர்நீதிமன்றம் நாளை விசாரணை
இதுதொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆ.வி.எஸ். விஜயக்குமார் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2003ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் உளவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணையை சோதனையிட்டு ஆய்வு நடத்தியது.
2006ம் ஆண்டு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் குழு ஒன்று அணையை பார்வையிட்டு ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கேரள போலீஸாரை நீக்கி விட்டு, சிஆர்பிஎப் அல்லது மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஆகியவற்றில் ஒன்றைச் சேர்ந்த வீரர்களை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மேலும் அணைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தீயணைப்புப் படைப் பிரிவை நிறுத்த வேண்டும். தீயணைப்புக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதை மத்திய அரசும் சரி, கேரள அரசும் சரி முற்றிலும் புறக்கணித்து விட்டன, நிறைவேற்றவில்லை. பரிந்துரைகளை பரிசீலனை கூட செய்யவில்லை.
கடந்த டிசம்பர் 3ம் தேதி 200க்கும் மேற்பட்டோர் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக கேட்டை அடித்து உடைத்துள்ளனர். டிசம்பர் 4ம் தேதி பாஜகவைச் சேர்ந்த பலர் ஊர்வலமாக சென்று அணையின் மதகுகளை சேதப்படுத்த முயன்றுள்ளனர்.
மேலும் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள், கேரள அரசின் துணையுடன், தேவையில்லாத பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசும், கேரள மாநில அரசும் அணைக்கும், அணைப் பகுதிக்கும், அங்குள்ள பொதுப்பணித்துறை அலுவலகம், அதன் ஊழியர்கள், குடும்பத்தினர், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டபடி மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த மனு நாளேயே விசாரணைக்கு வருகிறது.