பள்ளிகளில் கூரையைக் காணோம், இதுல எலைட் மதுக்கடை திறக்கிறார்களாம்: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் கூரையே இல்லை. அதை கட்டிக் கொடுக்காமல் அரசு எலைட் மதுக்கடைகள் திறக்கப் போகிறோம் என்று அறிவிப்பது வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திராவிடக் கட்சிகளால் தமிழகம் மோசமான நிலையில் உள்ளது. ஆகையால் திமுக, அதிமுகவுக்கு எதிராக மாற்று கட்சியைத் துவங்குவது காலத்தின் கட்டாயம் ஆகும். இதை மனதில் வைத்து 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை' என்ற தலைப்பில் அடுத்த வாரம் மாற்றுத் திட்டத்தை வெளியிடவிருக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளது என்று அரசு சொன்னால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இந்த விவகாரத்தில் அவர்கள் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். அரசின் நடவடிக்கையைப் பொருத்து தான் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் கூரையே இல்லை. அதனை கட்டிக் கொடுக்க அரசு நடிவடிக்கை எடுக்காமல் எலைட் மதுக்கடைகளைத் திறக்கப் போகிறோம் என்பது வருந்தத்தக்கது.
மத்திய அமைச்சர் கபில் சிபல் எப்பொழுதுமே ஏழை மாணவர்களுக்கு எதிராகத் தான் செயல்படுகிறார். தற்போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வருகிறது என்கிறார். இது தேவையில்லாதது. இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கல்லூரிகளை அரசே துவங்க வேண்டும் என்றார்.