அணை பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க மதுரை ஜகோர்ட் கிளை நோட்டீஸ்
மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்பு படையை நிறுத்தக்கோரும் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நான்கு வாரங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுப் பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற, விஜயகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கேரளாவில், தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கேரளா செல்லும் தமிழகப் பயணிகள், ஐயப்பப் பக்தர்கள் மற்றும் அணைப் பகுதியில் வசிக்கும் தமிழகப் பொறியாளர்களுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இருமாநில எல்லைப்பகுதியில் பிரச்சனை அதிகரித்து வருவதால், இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும், விஜயகுமார் வலியுறுத்தியிருந்தார்.
மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
தமிழக – கேரள எல்லைப் பகுதியில், பதற்றம் நிலவி வருவதால், இந்த மனு இன்று அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் நிலையிலும் அவசரம் கருதி இந்த வழக்கில் பங்கேற்றனர். நீதிபதிகள் கே என் பாஷா மற்றும் வேணுகோபால் தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அந்த நோட்டீசிற்கு 4 வார காலத்திற்க்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.