தமிழகத்தில் 6 மணி நேரம் மின் தடை: மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒப்புதல்!
ராமேஸ்வரம்: தமிழகத்தில் சுமார் 6 மணி நேரம் மின் தடை இருந்து வருகினறது. இருப்பினும் வரும் மார்ச் மாதத்திற்குள் மின்தடை அகன்று விடும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தான் மின்தடை தாறுமாறாக இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மின்தடையின்றி சுகமாக இருக்கலாம் என்று நினைத்து மக்கள் வாக்களித்தனர். ஆனால் தற்போது 6 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 6 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது என்பதை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தின் மின் தேவை, தற்போதைய நிலவரப்படி 12,000 மெகாவாட் ஆகும். ஆனால் தற்போது தமிழகத்திற்கு 9,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் 6 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவக்கினால் தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 930 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் மின் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்துவிடலாம். எனவே, வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications