காசு கொடுத்து மூட்டைப்பூச்சி கடி வாங்கிய பயணிகள்-பொதிகை எக்ஸ்பிரஸின் அவலம்
தென்காசி: செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் வண்டியில் மூட்டைப்பூச்சி தொந்தரவு அதிகம் இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். காசு கொடுத்து மூட்டைப்பூச்சி கடி வாங்கி தூக்கம் இழந்து தவித்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தென் தமிழக மக்களின் வசதிக்காக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சென்னைக்கு பயணம் செய்ய இந்த ஒரே ஒரு ரயிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
மூட்டைப்பூச்சி கடி
இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பது பயணிகளின் புகார். சாதாரண முன்பதிவு செய்யப்படாத பெட்டி முதல் குளிர்சாதன வசதியுள்ள பெட்டி வரை சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள பயணிகள் மூட்டைப்பூச்சி தொந்தரவினால் தூங்கமுடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
புகாருக்கு நடவடிக்கை இல்லை
இந்நிலையில் கடந்த வாரம் இரண்டாம் வகுப்பில் சென்னை பயணம் செய்த ஒருவர் மூட்டை கடியால் அவதிப்பட்டு நேற்று முன்தினம் திரும்பி வரும்போது ஏசி பெட்டியில் வந்துள்ளார். ஆனால் ஏசி பெட்டியிலும் மூட்டை கடி விட்டு வைக்கவில்லை என புலம்பினார்.மூட்டைப்பூச்சிக் கடிக்கு ஆளாகும் வயதானவர்கள் முழு தூக்கத்தையும் இழந்து நோய்வாய்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பயணிகள் குமுறுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதிகை ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.