ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சம் மோசடி : 3 நைஜீரிய வாலிபர்கள் கைது
சென்னை: ஆன்லைன் மூலம் மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய 3 நைஜீரிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பலரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவதாக, போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார்கள் வந்தன. இது தொடர்பாக கமிஷனர் திரிபாதியின் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.
துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் சுதாகரன், உதவி கமிஷனர் ஜெகபர்சாலி, இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் செம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்த நைஜீரிய வாலிபர்கள் ஆன்லைன் பணமோசடி செய்ததாக விசாரணையில் தெரிந்தது. இந்த மோசடி மூலம் எடுக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து செம்பாக்கத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், வாடகை வீட்டில் தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த ரிச்சார்டு, டிக்சன், ஒயிகுன்லே உள்ள 3 பேரை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 1 கார், 2 டிவிக்கள், 3 கேமராக்கள், 3 லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மோசடி மூலம் கிடைத்த பணத்தில் வாங்கியதாக கண்டறிந்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications