கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கர வன்முறை: 100 லாரிகள், 500 டன் காய்கறி சேதம்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளி மீது லாரி மோதியதால் அங்கு பயங்கர வன்முறை வெடித்தது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காலை 5.10 மணி அளவில் காய்கறி லாரிகள் காய்கறிகளை இறக்கிக் கொண்டிருந்தன. அப்போது 7ம் எண் நுழைவாயில் அருகே ஒரு லாரி காய்கறியை இறக்க வசதியாக பின்நோக்கி வந்தது. அப்போது அந்த பக்கம் சென்ற சுமை தூக்கும் தொழிலாளி சக்கரவர்த்தி (30) என்பவர் மீது லாரி மோதியது. இதில் அவருக்கு தலை, நெஞ்சு மற்றும் தோள் பகுதிகளில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
இத்தகவல் மார்க்கெட் வளாகம் முழுவதும் பரவியவுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 மற்றும் 14ம் எண் நுழை வாயில்களை மூடிவிட்டு விபத்து நடந்த 7ம் எண் வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரியை அடித்து நொறுக்கினர். இது குறித்து தகவல் அறிந்த அண்ணா நகர் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை கலைந்து போகுமாறு கூறினார்கள். விபத்து ஏற்படுத்திய லாரியை வெளியே எடுக்குமாறு போலீசார் தெரிவித்தவுடன் அதற்கு மறுப்பு தெரிவித்து தொழிலாளர்கள் அந்த லாரியை சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பதட்டத்துடன் லாரியை எடுத்த டிரைவர் அதை பின்னோக்கி ஓட்டியபோது அங்கு நின்ற வேன் மீது மோதியது. இதில் வேன் அருகே நின்ற மற்றொரு தொழிலாளி ஆதிமூலம் (24) என்பவரின் இடது கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை வெடித்தது. தொழிலாளர்கள் அங்கு காய்கறி இறக்க வந்த 100க்கும் மேற்பட்ட லாரிகளை அடித்து நொறுக்கினர். காய்கறிகள் ஏற்றிக் கொண்டு வந்த டிரக்கை கவிழ்த்தனர். போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து போகச் செய்தனர். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
காலை 10 மணி வரை மார்க்கெட் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. காய்கறி லாரிகள் ஒன்றொன்றாக புறப்பட்டு சென்றது. இந்த வன்முறை சம்பவத்தால் 500 டன் காய்கறிகள் சேதமடைந்தன. விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இருவரும் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த வன்முறையால் போலீஸ் துணை கமிஷனர் ஜூட் துரைபாண்டி மற்றும் தொழிலாளி பாலமுருகன் ஆகியோர் காயமைடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வாகனங்களை தாக்கியது, தொழிலாளிகள் மீது லாரி மோதியது, துணை கமிஷனரை தாக்கியது ஆகியவற்றிற்கு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், துணை கமிஷனரை தாக்கிய நபரைக் கண்டுபிடித்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழ்ககுப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.