முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் தமிழர்கள் மீது வழக்குப் போடுவதா?- சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி வந்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக தமிழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
சுவரொட்டி ஒட்டினால் கூட வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கேரளத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு வாழும் தமிழர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
தமிழக தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இந்த சம்பவங்களுக்கு கேரள அரசு எந்த வித வழக்கும் பதிவு செய்வது இல்லை.
முல்லை பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தற்போது தமிழகத்தில் அறவழியில் போராடினாலும் தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.
அறவழியில் போராடிய நாம் தமிழர் கட்சி தோழர்கள் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு சிறைக்கு சென்று கைது செய்யப்பட்ட தோழர்களை சந்தித்து வருகிறேன். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தி கொள்ளலாம் என்று 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இந்த தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதற்காக கேரள அரசு மீத மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்தியிலும், கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்வதே இதற்கு காரணம் ஆகும். கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக அந்த மாநில அரசு முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக பீதியை உருவாக்கி வருகிறது," என்றார்.












Click it and Unblock the Notifications