ப.சிதம்பரத்திற்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கு உதவியதாக எழுந்த சர்ச்சை குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே சிதம்பரம் பேசியதால் தான் பாஜக இந்த முடிவு எடுத்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி தலைமையில் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நாடாளுமன்றத்தை அவமதித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து பாஜக தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா கூறியதாவது,
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் சிதம்பரம் பத்திரிக்கையாளர்களை நாடாளுமன்றத்திற்கு வெளியே சந்தித்து பேசியுள்ளார். இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுப்பது குறித்து யஷ்வந்த் சின்ஹா நோட்டீஸ் கொடுத்துள்ளார். ரஷ்யாவில் இருந்து திரும்பும்போது பிரதமர் ப. சிதம்பரம் குற்றமற்றவர் என்று செய்தியாளர்களிடம் கூறியிருப்பது முறையல்ல.
நாடாளுமன்றம் தான் எது சரி, எது தவறு என்று முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்த அனைத்து ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அது குறித்து விவாதித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்க வேண்டும். அப்படி இருக்கையில் பிரதமர் சிதம்பரத்திற்கு நன்னடத்தை சான்றிதழ் கொடுப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பது போன்றாகும் என்றார்.
டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறு ப.சிதம்பரம் டெல்லி போலீசாரை வலியுறுத்தியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் சிதம்பரம் இந்த குற்ற்ச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.