எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்கு ஜெ. தந்த பரிசு- சசியிடமிருந்து அதிமுகவுக்கு விடுதலை!!!
அதிமுக உருவான வரலாறு, கட்சியை எம்.ஜி.ஆர். வளர்த்த விதம், மக்களிடையே கட்சிக்கு நற்பெயரை உருவாக்கியது ஆகியவற்றை தெளிவாக அறிந்த மூத்த கட்சியினருக்கு, சசிகலாவின் ஆதிக்கம் என்ற விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே ஜீரணிக்க முடியவில்லை.
இது எம்.ஜி.ஆரின் கட்சியா அல்லது சசிகலா குடும்பக் கட்சியா என்ற ஆதங்கத்தில் அவர்கள் இத்தனை காலம் இருந்து வந்தனர். எப்போது சசிகலாவுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தாரோ அன்றே அதிமுகவிலிருந்து எம்ஜிஆர் காணாமல் போய் விட்டார்.
எம்.ஜி.ஆரையும், இரட்டை இலையையும் நீக்கி விட்டால் அதிமுக ஜீரோ என்பது ப்ரீகேஜி படிக்கும் குழந்தைக்குக் கூடத் தெரியும். அப்படிப்பட்ட இரு ஸ்டார் விஷயங்களில், எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட அதிமுகவில் காணாமலேயே போய் விட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் இரட்டை இலை என்ற விஷயமே கட்சித் தலைமைக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அதிமுகவின் இயல்பு மாறிப் போயிருந்தது.
சசிகலாவின் தவறான ஆலோசனைகள், அநியாயத் தலையீடுகள், நடராஜன் செய்து வந்த நாட்டாமை போன்றவைதான் இதற்கு காரணம் என்பது கட்சியினரின் ஆணித்தரமான கருத்து.
சசிகலா, நடராஜன், மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வந்த அட்டகாசங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. திமுக குடும்பத்தைப் பார்த்து கேலி செய்து வரும் நிலையில், சசிகலா குடும்பத்தினர் அட்டகாசம் குறித்து மற்றவர்கள் கேட்கும்போது வெட்கித் தலை குணிய வேண்டியுள்ளதே என்று ஒவ்வொரு அதிமுக தொண்டரும் புழுங்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.
கட்சியை சாக்கடை போல மாற்றி விட்டது சசிகலா குடும்பம் என்பது தீவிர எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் புகாராகும். இப்படிப்பட்ட நிலையில்தான் சசிகலா மற்றும் குடும்பத்தினர் கூண்டோடு நீக்கம் என்ற செய்தி அவர்களது இதயத்திற்கு நற்செய்தியாக வந்து சேர்ந்துள்ளது.
இனிமேலாவது அதிமுகவை ஜெயலலிதா வலுப்படுத்த வேண்டும், உண்மையான, தூய்மையான, நேர்மையான, காலாகாலத்திற்குப் பெயர் சேர்க்கும்படியான அதிமுக ஆட்சியை அவர் தர வேண்டும் என்று அவர்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர். புதிதாக ஜெயலலிதா எதையும் செய்ய வேண்டியதில்லை. எம்ஜிஆரின் பாணியைக் கடைப்பிடித்தாலே போதும் அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் நற்பெயர் வந்து சேரும் என்பது அவர்களின் கணிப்பு.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கு முன்னதாக சசிகலா குரூப் வெளியேற்றப்பட்டிருப்பது எம்.ஜி.ஆர். பிறந்த நாளுக்கு கட்சியினருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அருமையான பிறந்த நாள் பரிசு. இதனால் கட்சியினர் உண்மையிலேயே சந்தோஷமாகியுள்ளனர். இந்த சந்தோஷம் நீடித்திருப்பது ஜெயலலிதாவின் கைகளில்தான் உள்ளது என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் அதிமுகவினர் கூறுகின்றனர்.