பல லட்சத்தை ஸ்வாஹா செய்து விட்டார்- சென்னை நபர் மீது சவூதி நிறுவனம் புகார்
சென்னை: சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இணையதளம் மூலம், பல லட்ச ரூபாயை நூதன முறையில் ஏமாற்றி விட்டதாக சவூதி அரேபியா நிறுவனம் புகார் அளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ஷாம்ஸ் டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் சென்னையில் உள்ள ரமேஷ் என்பவருடன் இரும்பு சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது.
இணையதளம் மூலம் அளிக்கப்பட்டிருந்த தகவல்களைப் பார்த்து இரும்பு வாங்குவதற்காக 29 லட்சம் ரூபாய் வரை ரமேஷின் வங்கி கணக்கில் அந்த நிறுவனம் செலுத்தியது. ஆனால் ரமேஷ் அளித்த இரும்புகள் மூன்றாம் தரமானவையாக இருந்ததால் சவூதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை வந்து ரமேஷ் அளித்திருந்த முகவரிக்கு சென்று பார்த்தனர்.
போலி நிறுவனம்
அப்போதுதான் அந்த முகவரி போலியானது என்று அவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து இணையதளம் மூலம் மட்டுமே நிறுவனத்தை தொடங்கி, தங்களிடம் 29 லட்சம் ரூபாய் பணத்தை ரமேஷ் மோசடி செய்து விட்டதாக சென்னை மாநகர காவல்துறையில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி நிறுவனத்தைச் சேர்ந்த யூசுப் கீர்வாலா, லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த ரமேஷ், தனது செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டு வீட்டை விட்டு தப்பிவிட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மோசடி நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.