எம்ஜிஆர் சமாதியில் ஜெயலலிதா அஞ்சலி!

அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், தமிழக அரசியலில் தோல்வியே அறியாத முதல்வர் என்று புகழப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 24-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 10.45 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா வந்ததும் "புரட்சித் தலைவர் புகழ் வாழ்க" என கோஷம் எழுப்பினர்.
அஞ்சலி செலுத்தியதும் நினைவிடத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு உறுதிமொழி ஏற்பும், மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.
எம்.ஜி.ஆரின் புகழ் பற்றி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப கூறி உறுதி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா மேடையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் இரட்டை விரலை காண்பித்தார். பதிலுக்கு தொண்டர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா காரில் புறப்பட்டுச் சென்றார். அங்கு கூட்டம் திரளாக இருந்ததால் மக்கள் வெள்ளத்தில் மிதந்த படி ஜெயலலிதா கார் மெதுவாக சென்றது.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மது சூதனன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, வளர்மதி, உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications