மக்களுக்கு மத்திய அரசு தரும் புத்தாண்டு பரிசு: பெட்ரோல் விலை ரூ. 1 உயர்வு
பெட்ரோல் விலையைக் குறைப்பதை விட உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் ஏகப்பட்ட காரணங்கள் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு தயங்குவதே இல்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருககு ரூ.1 உயர்த்த திட்டமிட்டுள்ளன. விலை உயர்த்தப்பட்டால் புதிய விலை வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் கடந்த நவம்பர் மாதம் இரண்டு முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.22ம், டிசம்பர் 1ம் தேதி 78 பைசாவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் அரசின் உத்தரவு பெற்றபிறகே விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.