நெஞ்சு வலி, மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்டாலின் வீடு திரும்பினார்
சென்னை: நெஞ்சு, மூச்சுத்திணறல், முதுகு வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், கடுமையான முதுகு வலி ஆகியவை ஏற்பட்டதால் அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாச்சலம் தலைமையிலான டாக்டர்கள் குழு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனையும் நடத்தப்பட்டது. இதில் அவருக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. குறிப்பாக ரத்தக் குழாயில் அடைப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் அவரை ஒரு நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணிக்க முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து நேற்று முழுவதும் அவர் மருத்துவமனையில் இருந்தார்.
இதையடுத்து நேற்று பிற்பகல் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் இரவு 10 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஸ்டாலின் வீடு திரும்பினார். அவர் சில நாட்கள் பூரண ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வீடு அபகரிப்பு வழக்கை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications