கூடங்குளம் குறித்து பிரதமரிடம் பெரிதாகப் பேசாத ஜெயலலிதா
சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் விவகாரம் குறித்து எதுவும் பெரிதாகப் பேசவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் வைத்து பிரதமரை முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவே சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது அவர் பிரதமரிடம் 16 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் கூடங்குளம் விவகாரம் குறித்து அவர் எதுவும் பெரிதாக குறிப்பிடவில்லை. கூடங்குளத்தின் மின்சார உற்பத்தி துவங்க தாமதமடைந்துள்ளது என்று மட்டுமே தெரிவி்ததுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு மாநில அரசின் குழுவை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்தபோது அதுபற்றி எதுவும் பேசாதது போராட்டக் குழுவை அதிருப்தியடைய வைத்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யா சென்ற பிரதமர் அங்கிருந்து கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கும் என்று அறிவித்து போராட்டக்காரர்களின் நம்பிக்கையில் இடியை இறக்கினார். அதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, மக்களின் அச்சத்தைப் போக்கி விட்டுத்தானே அணு மின் நிலையம் இயங்கும் என்று கேட்டிருந்தார். அதற்குப் பிரதமர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்தும் அவரிடம் கூடங்குளம் பிரச்சனை பற்றி விளக்கம் கேட்காதது, பேசாதது போராட்டக்காரர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.