நெல்லையிலிருந்து சென்னை வந்து, வாழ்ந்து பழவேற்காட்டில் மரணித்த சுந்தரபாண்டியன் குடும்பத்தார்!
சென்னை: நெல்லை மாவட்டம் இட்டமொழி கிராமத்தில் பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்து பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டு, குடும்பத்தைக் காக்க சென்னைக்கு வந்து, கடும் உழைப்பால் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல நிலைக்கு மாறி, கடைசியில் தனது மொத்தக் குடும்பத்தோடும் பழவேற்காடு ஏரியில் மூழ்கி பலியான சுந்தரபாண்டியன் குடும்பத்தாரின் முடிவு அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாங்குநேரி அருகே உள்ள இட்டமொழி கிராமம்தான் நேற்று பழவேற்காடு ஏரியில் குடும்பத்தோடு ஜல சமாதி ஆன சுந்தரபாண்டியன் நாடாரின் பூர்வீகம் ஆகும். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. பனை ஏறும் தொழில் ஈடுபட்டிருந்தார் சுந்தரபாண்டியன்.
அவருக்குப் பின்னர் திருமணம் நடந்தது. ஜெயமேரியை மணந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு பாக்கியமணி என்ற மகளும், ஜெயதுரை, ஆசிர்வாதம், கனகராஜ், தங்கராஜ் என நான்கு மகன்களும் பிறந்தனர். 6 பிள்ளைகளுடன் வறுமையில் வாடிய சுந்தரபாண்டியன் பிழைப்புக்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.
சென்னையில் பல்வேறு கடைகள், ஹோட்டல்களில் வேலை பார்த்தார். இந்த அனுபவத்தை வைத்து கும்மிடிப்பூண்டியில் சிறிய அளவில் ஹோட்டல் தொடங்கினார். குடும்பமாக சேர்ந்து ஹோட்டல் தொழில் ஈடுபட்டனர். நாடார் சமுதாயத்தினருக்கே உரிய சுறுசுறுப்பும், கடின உழைப்பும் அவர்களை வாழ்க்கையில் உயர்த்தியது.
அவர்களது வாழ்க்கையிலிருந்து வறுமை மெல்ல விலகி ஓடத் தொடங்கியது. மகன்களுக்கும், மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்தார், பேரப் பிள்ளைகளையும் பார்த்தார், நல்ல நிலைக்கும் உயர்ந்தார் சுந்தரபாண்டியன். அனைவரும் கூட்டுக் குடும்பமாகத்தான் வசித்து வந்தனர்.
குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சுந்தரபாண்டியன், தனது கடைகள், ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் நன்றாக கவனித்துக் கொள்வாராம். ஊரில் நடக்கும் எந்த விசேஷத்திற்கு குடும்பத்தோடு போனாலும் தொழிலாளர்களையும் உடன் அழைத்துச் செல்வாராம்.
வருகிற 29ம் தேதி ஊரில் சுந்தரபாண்டியன் நாடாரின் அண்ணனின் பேரனுக்கு திருமணம் நடக்கவிருந்தது. அதில் கலந்து கொள்ள குடும்பத்தோடு செல்வதாக இருந்தார் சுந்தரபாண்டியன். நேற்று படகு சவாரிக்கு வந்தபோது கூட மணமகனான தனது பேரன் ஜேக்கப் செல்வனுடன் அவர் போனில் பேசியுள்ளார். அதன் பிறகுதான் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.
இந்த சோகத்தால் தற்போது ஜேக்கப் செல்வனின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர் அவரது குடும்பத்தார்.