தனியார் நிகழ்ச்சிக்காக பிரதமர் தமிழகம் வந்தது ஏன்?- விஜயகாந்த் கேள்வி!
சென்னை: தமிழகத்தின் ஒரு பிரச்சினையையும் தீர்க்க அக்கறை காட்டாத பிரதமர், எதற்காக 2 தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்தார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் படு காட்டமாக கேட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்காக கிளம்பிய விஜயகாநத்தையும், அவருடன் கிளம்பிய தொண்டர்களையும் போலீஸார் கிளம்பிய இடத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பிரதமரை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தின் எந்தப் பிரச்சினையிலும் பிரதமர் அக்கறை காட்டவில்லை. மீனவர்கள் மீதான தாக்குதல், முல்லைப் பெரியாறு பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை என எதிலுமே அவர் அக்கறை காட்டவில்லை.
இந்த நிலையில், 2 தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் தமிழகம் வந்துள்ளார். எதற்காக அவர் வந்துள்ளார்?
அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்ட முயன்றால் அதையும் தற்போது தடுத்துக் கைது செய்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் விஜயகாந்த்.
கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டார்
கைது செய்யப்பட்ட விஜயகாந்த் பின்னர் கல்யாண மண்டபம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.