தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: ஸ்ரீதர் வாண்டையார்
மதுரை: தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 1995ம் ஆண்டு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் கீழவளவு கிராமத்தில் இருந்து மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக கம்பம் வரை 220 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் இன்று வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை.
தற்போது முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என கேரளத்தில் உள்ளவர்கள் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. இதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டபோது, முல்லைப் பெரியாறு அணை இருக்கும் பகுதியை தமிழகத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆனால் இணைக்கவில்லை.
எனவே, இப்போதாவது அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை உடனே தமிழகத்துடன் இணைக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
மேலும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும். அணையில் தங்கி இருக்கின்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இன்றும் வலுவாக உள்ளது. 100 ஆண்டுகளைத் தாண்டியுள்ள முல்லைப் பெரியாறு அணை அதைவிட வலுவாகவே உள்ளது.
எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்த மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மறுத்தால் கேரள அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications