முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசை கண்டித்து புதுக்கோட்டையில் மனித சங்கிலி
புதுக்கோட்டை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனே தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக, கேரள மக்களின் சகோதரத்துவம், தேசிய ஒருமைப்பாடு உள்ளி்ட்டவற்றை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை விரைந்து முடித்து, அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்கி தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கேரள அரசை கண்டித்து புதுக்கோட்டையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அண்ணா சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி அண்ணா சிலையில் இருந்து தொடங்கி கீழராஜ வீதி, பிருந்தாவனம, வடக்கு ராஜவீதி, திலகர் திடல், மேல 4 ம் வீதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மின்சார அலுவலகம் வழியாக மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது.
இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர்கள், ரோட்டரி அமைப்புகள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.