புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் மனு
சென்னை: புதிய தலைமைச் செயலகத்தை, சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை, எம்.கே.பி.நகரைச் சேர்ந்த வீரமணி என்பவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டடத்தில் பணிகளை நிறுத்தவும், புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலர், சட்டசபை இயங்குவது எனவும், புதிய அரசு முடிவெடுத்தது. அரசியல் காரணங்களுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து, "ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். இதையடுத்து, புதிய தலைமைச் செயலகம், சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்' என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி, ஆகஸ்ட் 22ம் தேதி மனு அனுப்பினேன். இம்மனு நிலுவையில் இருக்கும் போதே, மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தது. டெண்டர் கோரியதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியது. அதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை நினைவூட்டி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இந்நிலையில் என் மனுவை அரசு நிராகரித்து, கடந்த, 8ம் தேதி உத்தரவிட்டது. அரசு எடுத்த கொள்கை முடிவை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
சட்டசபைக்கான கட்டடம்
தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடம், மருத்துவமனைக்காக எப்படி தகுதி பெறும் என்பதை தெரிவிக்கவில்லை. கட்டடத்தின் அமைப்பானது, மருத்துவமனையாக மாற்றுவதற்கு வசதிப்படாது.
எனவே, புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவு செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் நாகப்பன், வாசுகி அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். இந்த மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்துக்கு, டிவிஷன் பெஞ்ச் ஒத்தி வைத்தது.