அழகிரியின் பிறந்தநாள் விழாவுக்கு ராஜா முத்தையா மண்டபத்தைத் தர மறுப்பதாக புகார்
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சினிமாவில் காமெடியன் ஒருவர் வசனம் பேசுவார். அந்த வசனம் இப்போது அழகிரிக்கு செம பொருத்தமாகியுள்ளது. மதுரையை ஒரு காலத்தில் படை பலத்தோடும், பரிவாரப் பட்டாளத்தோடும் கட்டியாண்ட அவருக்கு இன்று பிறந்த நாள் கொண்டாட ஒரு மண்டபம் கிடைக்காத நிலை.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் 61வது பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் மற்றும் தென் மாவட்ட திமுகவினர் வெகு விமர்சியாகக் கொண்டாடுவது வழக்கம். மதுரையே அப்போது அலம்பலாக காணப்படும். எங்கு பார்த்தாலும் 'அண்ணன்' படமாகத்தான் இருக்கும். கக்கூஸ் சுவர் முதல் கலெக்டர் ஆபீஸ் சுவர் வரை எல்லா இடங்களிலும் சிரிப்பார் அழகிரி. அவரது பெயரை விட ஆதரவாளர்கள் கொடுக்கும் பட்டங்கள்தான் வெகு ஜோராக இருக்கும்.
திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக அழகிரியின் பிறந்த நாள் விழா ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் தான் நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் பிறந்த நாள் விழாவை நடத்த திருமண மண்டபத்தை கேட்டபோது அது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் மேலாளர் தெரிவித்து விட்டாராம்.
ஆனால் அழகிரி தரப்பு இதை நம்பத் தயாராக இல்லை. ஆட்சி மாறியுள்ள நேரத்தில் மண்டபத்தை கொடுத்தால் வம்பு ஏதாவது வருமோ என்ற பயத்தில் தான் மேலாளர் அவ்வாறு கூறியதாக அழகிரி தரப்பினர் தெரிவித்தனர்.