பரமக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நாமம் போட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு
பரமக்குடி: போலி முகவரி கொடுத்து பி.எஸ்.என்.எல். சிம் கார்டை பயன்படுத்தி ரூ.7 லட்சத்திற்கு பேசிவிட்டு, பணம் கட்டாமல் ஏமாற்றியவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
முதுகுளத்தூர் சாலை, பரமக்குடி என்ற முகவரியில் மோகன் மகன் ராம்குமார் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு கார்டு (ஐ.எஸ்.டி.இணைப்புடன்) வாங்கினார். தேமுதிக நகரச் செயலாளர் பொருள் பொன்னையா மற்றும் அவரது மருமகன் சேவியர் ராஜன் ஆகியோர் உட்பட சிலர், கார்டு வாங்க உடந்தையாக இருந்தாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ராம்குமார் ஒரே மாதத்தில் ரூ.7 லட்சத்திற்கு சர்வதேச அழைப்புகளுக்கான வசதிகளை பயன்படுத்தி வெளிநாட்டு எண்களுக்கு பேசியுள்ளார். அதற்கான பில் அனுப்பப்பட்டபோது அந்த முகவரி தவறானது என பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு திரும்பி வந்தது.
இது குறித்து பரமக்குடி பி.எஸ்.என்.எல். துணை கோட்ட பொறியாளர் நவ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராம்குமாரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
மேலும், அதிகாரிகளின் துணையோடு மோசடி நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே பொருள் பொன்னையா மற்றும் சேவியர்ராஜன் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுள்ளதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.