புதிய அணைக்கு அனுமதி கோரி இதுவரை கேரளா அணுகவில்லை-ஜெயந்தி நடராஜன்
சென்னை: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி கோரி இதுவரை கேரள அரசிடமிருந்து எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
பல்லுயிரினம் ஆணையம் சார்பாக 2 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமை தாங்கி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் வந்துள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஜெயந்தி, இதுகுறித்து அரசிடம் இருந்து கடிதம் வந்தால் முறையாக பரிசீலிப்போம் என்றார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இதுபற்றி பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டது. இதுவரை கேரளா அரசு அனுமதி கேட்கவில்லை என்றுதான் பாராளுமன்றத்தில் நான் கூறி இருக்கிறேன் என்று பதிலளித்தார் அமைச்சர்.
திமுக ஆட்சிக் காலத்தில் பல நூறு கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அதிமுக ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட கட்டிடமாக உருமாறியுள்ளது. புதிய தலைமைச் செயலக வளாகத்தில் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அதிமுக அரசு அறிவித்தது.
ஆனால் இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெயந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.