பணக்கார குடும்பத்தில் சேர்ந்த மல்லிகை: கிலோ ரூ.1,500
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை விடிய விடிய பனிப்பொழிவு காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசும் இருந்தது. கடும் பனிப்பொழிவால் கீரை, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
கத்தரி தோட்டங்களில் பிஞ்சு உற்பத்தி குறைந்துள்ளது. தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், மாதவலாயம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூந்தோட்டங்களும பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பிச்சி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
காலை நிலவரப்படி தோவாளை மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. பிச்சிப் பூ கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. அரளி ரூ.200க்கும், ஆரஞ்சி கேந்தி ரூ.40க்கும், மஞ்சள் கேந்தி ரூ.60க்கும் விற்கப்பட்டது. கோழிக்கொண்டை ரூ.40க்கும், ரோஜா பாக்கெட் ரூ.50க்கும் விற்கப்பட்டது. கொழுந்து கிலோ ரூ.120க இருந்தது. மல்லிகை தட்டுபாடு நிலவுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்வது குறைந்துள்ளது.