ராணுவ தளபதியின் வயசு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு தனது நிலையை பிப்ரவரி 10ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950 என ராணுவ தலைமை செயலகத்தில் பதிவாகி உள்ளது.
இந்த தேதியின் அடிப்படையிலேயே அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது.
இதன்படி, மே 31ம் அவர் ஓய்வு பெற வேண்டும். இதற்கிடையே, ராணுவத்தின் மற்றொரு அலுவலகத்தில் அவர் பிறந்த ஆண்டு 1951 ஆக பதிவாகி உள்ளது.
இதையே தனது பிறந்த ஆண்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகத்தில் சிங் விண்ணப்பித்தார். இதை அமைச்சகம் நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் லோதா, கோகலே முன்பு விசாரணைக்கு வந்தது.
வி.கே.சிங் பிறந்த தேதி விவகாரத்தில், மத்திய அரசின் நிலையை வரும் 10ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை அன்றைய தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தற்போது வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இப்பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ள காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.