அண்ணாவின் 43வது நினைவு நாள்-திமுக பேரணி-ஜெ.வும் அஞ்சலி
சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 43வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். முதல்வர் ஜெயலலிதாவும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை வாலாஜா சாலையில் இருந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி கருணாநிதி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காரில் அமர்ந்தபடி கருணாநிதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா அஞ்சலி
இதேபோல முதல்வர் ஜெயலலிதாவும் கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில், அஞ்சலி செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அஞ்சலி
தேமுதிக தலைவர் விஜயகாந்த்த கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.