ப.சிதம்பரத்திற்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்- ஜெ.
சென்னை: சிறப்பு சிபிஐ நீதிமன்றமே மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை வரவேற்கிறேன். அடுத்து இதில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் மூன்று முக்கிய தீர்ப்புகளை அளித்தது.
இதுகுறித்து நேற்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டதற்கு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பையும் வரவேற்கிறேன். சிபிஐ சிறப்பு கோர்ட்டில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் இதில் இறுதி தீர்ப்பை அறிவிக்க வேண்டியது கோர்ட்தான் என்றார்.
ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று கோருவீர்களா என்ற கேள்விக்கு இந்த வழக்கு தொடர்பாக இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.