என் மனைவிகள் கூட ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்!- கருணாநிதி
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு நேற்று முன்தினம் கூடி விவாதித்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சங்கரன்கோவில் தேர்தலில் திமுக வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?
தேர்தல் கமிஷன் தேதி குறிப்பிட்ட பின்பு அது பற்றி பரிசீலிப்போம்.
திமுக மத்திய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது பதவி விலகினார்கள். இப்போது ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக கேட்கிறதே?
இந்த கேள்வியை தவறான முகவரியில் கேட்கிறீர்கள்.
காங்கிரசோடு கூட்டணி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
இந்தியாவின் முன்னேற்றத்தையும், மதசார்பற்ற தன்மையையும், ஏழை, எளிய தொழிலாளர்கள், மக்களுடைய வாழ்வையும் எந்த கட்சி மதசார்பற்ற முறையில் அணுகுகிறதோ அந்த கட்சியோடு நாங்கள் தொடர்பு கொள்வோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறோம். அந்த உறுதிபாட்டோடு எந்த கட்சி எங்களை அணுகினாலும் அதுபற்றி ஆராய்ந்து முடிவெடுப்போம்.
ஒரு பத்திரிகையில் மு.க.ஸ்டாலின் அடுத்த திமுக தலைவராக வர வேண்டும் என்று 58 சதவீம் பேர் வாக்களித்துள்ளனர். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
என் மகனுக்கு இப்படிபட்ட ஒரு பெருமை வந்தால் நான் அதை மறுப்பேனா.
அதே சர்வேயில் குறிப்பிட்ட சதவீதம் பேர் நீங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே?
அந்த பத்திரிகையில் மட்டுமல்ல என்னுடைய மனைவிகள் இருவரும் அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.