தேவாலய ஆயர் பணியில் திருநங்கைகள்-தென்னிந்திய திருச்சபை அதிரடி முடிவு!
சென்னை: கிறித்துவ தேவாலயங்களில் ஆயர்களாக திருநங்கைகளை நியமிக்க தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.
தேவாலயங்களில் உள்ள பீடங்களில் முன்பு ஆண் ஆயர்கள் மட்டுமே ஏறி, திருச்சபையினருக்கு பிரசங்கம் செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பல தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவாலயங்களில் பெண் ஆயர்களும் பீடங்களில் ஏறி இறை போதனை செய்கின்றனர்.
சி.எஸ்.ஐ.யின் சென்னைப் பேராயத்தின் மூலம் ஏழைகள், சிறுவர், இளைஞர், வயதானவர்கள் மத்தியில் பல்வேறு போதகர்கள் மூலம் இறைப்பணி செய்து வருகிறது. இந்த இறைப்பணி மூலம் ஆண், பெண் அனைவருமே பயனடைகின்றனர்.
ஆனால் திருநங்கைகளுக்கென்று (அரவாணிகள்) எந்த இறைப்பணியும் செய்யப்படவில்லை என்பதை பேராயர் தேவசகாயம் உணர்ந்தார். அவர்களையும் இறை வழிக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக, திருநங்கைகள் மத்தியில் இறைப்பணியை செய்ய ஆயர்களையும், போதகர்களையும் அனுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி, திருநங்கைகளுக்கான இறை போதனையையும், அவர்களை மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.
திருநங்கைகளின் உணர்வுகளை நன்றாக அறிந்து அவர்களை இறை வழியில் நடத்திச்செல்வதற்கு அரவாணிகள்தான் மிகச்சரியாக இருப்பார்கள் என்பதால், சி.எஸ்.ஐ. திருச்சபையின் தேவாலயத்தில், திருநங்கைகளை ஆயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.