2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்போம்; சேவையை நிறுத்தவும் வாய்ப்புள்ளது-யூனிநார்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மீண்டும் பங்கேற்போம் என்று யூனிநார் தொலைத் தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நார்வேயைச் சேர்ந்த டெலிநார் தொலைத் தொடர்ப்பு நிறுவனமும் யுனிடெக் ரியல் எஸ்ட்டே நிறுவனமும் இணைந்து, யூனிநார் செல்போன் சேவையை இந்தியாவில் தொடங்கின. இப்போது நாடு முழுவதும் சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்கள் யூனிநார் செல்போன் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாகக் கூறி ஆ.ராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 11 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் யூனிநார் நிறுவனத்தின் லைசென்ஸ்களும் ரத்தாகிவிட்டன.
இதையடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரத்தை மீண்டும் விற்க ஏலம் விடவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஏலத்துக்கான புதிய விதிமுறைகளை டிராய் அமைப்பு வகுத்து வருகிறது.
இந் நிலையில் யூனிநார் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய நிர்வாக இயக்குனர் சிக்வே பிரெக்கே நிருபர்களிடம் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் மறு ஏலத்தில் நாங்கள் பங்கேற்போம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. எனவே இந்திய செல்போன் சேவை சந்தையில் இருந்து யூனிநார் நிறுவனம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களுக்கான அடிப்படை விலை அரசால் நிர்ணயிக்கப்பட்ட பின்னரே, இந்த லைசென்ஸ் ஏலத்தில் பங்கேற்பது பற்றி நாங்கள் இறுதி முடிவை எடுக்க முடியும் என்றார்.
இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், யூனிநார் நிறுவனத்தின் சேவை தொடர்கிறது. இப்போதைக்கு ஊழியர்களை நாங்கள் நீக்கப் போவதில்லை. தொடர்ந்து எங்கள் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம் என்றார்.