முல்லைப் பெரியாறு: மத்திய அரசைக் கண்டித்து இன்று உண்ணாவிரதம்- கேரள நிதியமைச்சர்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணாத மத்திய அரசைக் கண்டித்து கேரள காங்கிரஸ்(எம்) கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான கே.எம். மாணி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசும், கூடாது என்று தமிழக அரசும் பிடிவாதமாக உள்ளன. இந்த பிரச்சனையால் இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவியது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் சேதப்படுத்தப்பட்டது. கேரளாவில் பணிபுரிந்து வந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணக்கோரி கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவரும் இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசி தீர்வு காண வழிவகை செய்வதாக உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு எந்த தீர்வையும் காணவில்லை. இதையடுத்து கேரள காங்கிரஸ்(எம்) கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான கே. எம். மாணி கூறியதாவது,
பிரதமர் மன்மோகன்சிங் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீ்ர்வு காணப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. 2 மாதங்கள் ஆகியும் இன்னும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொளளப்படவில்லை.
இதை கண்டித்து கேரள காங்கிரஸ்(எம்) மீண்டும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க கட்சியின் இடுக்கி மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இடுக்கி சாப்பாத்து பகுதியில் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் தொடர் போராட்டங்கள் குறித்து முல்லைப் பெரியாறு அணை போராட்ட குழுவினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.