இளைஞர்கள், புதிய வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கவில்லை: ஸ்டாலின்
திருக்குவளையில், திமுக தலைவர் கருணாநிதி பிறந்த இல்லத்தில், கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின்,
திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றாகச் செயல்படும் இளைஞரணிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும், இளைஞர் அணி மட்டுமே சிறப்புக்குரிய அணியாக உள்ளது.
இதற்கு முன்பு இளைஞரணி நிர்வாகிகளாக 30 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் இருந்தார்கள். மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், பேரூராட்சி செயலாளர் கொடுக்கும் பட்டியல்களின்படி பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்ற தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் உத்தரவிட்டுள்ளனர்.
1967ம் ஆண்டில் ல் திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு இளைஞர்களும், மாணவர்களும் உறுதுணையாக இருந்தனர். அப்போது இருந்த ஆர்வம் இப்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. காரணம், அப்போது இருந்த மொழி ஆர்வம் இப்போது இல்லை. தாய்மொழியைக் காக்க ஹிந்தியை எதிர்த்துப் போராடிய காலம் அது.
காலச்சூழல் மாறியுள்ளதே தற்போதைய நிலைக்குக் காரணம். கடந்த திமுக ஆட்சியில், 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை கருணாநிதி 5 ஆண்டுகளில் செய்து முடித்தார். மீண்டும் கருணாநிதி முதல்வராக வந்தாலும்கூட இப்படிச் செய்ய முடியுமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
ஆனால், ஏதோ சில காரணங்களால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம். தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. நானேகூட காரணமாக இருந்திருக்கலாம். இளைஞர்கள், புதிய வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கவில்லை.
இப்போது ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இளைஞரணியை வலுப்படுத்தவில்லை. நமது இன உணர்வைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்தப் பணி. ஆட்சியில் இருந்துதான் மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதல்ல. நமது கொள்கைகள் மூலம் பணிகளைச் செய்யலாம்.
ஆட்சியில் இல்லாத போதும், தொண்டர்கள் எழுச்சியோடு கூடுவது தான் திமுகவின் பெருமை. பதவியை நாம் தேடி செல்லக் கூடாது. பதவி நம்மை நாடி வரும். நாடி வரும் பதவியை பொறுப்போடு, கடமையாக நினைத்து செயலாற்ற வேண்டும்.
இளைஞரணியில் பொறுப்பு கிடைக்காதவர்களுக்கு மாணவரணி, வழக்குரைஞர் அணி உள்ளிட்ட அணிகளில் பொறுப்பு கிடைக்கும் என்றார் ஸ்டாலின்.